மண்ணிலே பொற்குவை கண்டான்!-உயர்
மானமே பெரிதென வாழ்ந்திடும் உழவன்!
கண்போல மண்ணையே காத்து!-அதன்
கருணையால் பூமியில் மாயங்கள் செய்வான்!
விண்ணையும் மண்ணையும் சேர்த்தே-தன்
வித்தையால் விந்தைகள் புரிந்திடும் தோழன்!
திண்மையால் தேசத்தைக் காத்து-என்றும்
உண்மையின் வழியிலே உழைப்பதும் அவனே!
பொழிகின்ற மழைநீரைச் சேர்த்து-முகப்
பொலிவுடன் சேற்றிலே மாட்டோடு உழன்று
செழுமை மிகு செந்நெல் விளைக்கும்-எங்கள்
செம்மன மாந்தரைப்போல் வேறு இலரே!
மனிதர்க்கு மட்டுமல்லாது-பிற
மற்றைய உயிர்கட்கும் உணவினைத் தந்து
கனிவோடு வாழ்ந்திடும் அன்பன்-அவர்
கதையினைச் சொல்வதே யாம் பெற்ற பேறு!
மழைவேண்டி நாளுமே நெஞ்சில்-அவர்
மனம்ஒன்றி வேண்டிடும் பாங்கினைக் கண்டு!
மழைமேகம் பொழிந்திட அமிழ்தே!-வையம்
வளமாகும் உயிர்களை வாழ்த்தியே நாளும்!
(கல்லிலே கலை வண்ணம் கண்டான்-பாடல் மெட்டு)

Leave a Reply