தோகைமயில் நடனமிட தூதுவளைக் கொடி அசைய

தென்றலெனும் பெண் அவளும் வந்தாள்!-நனி

தேனிசையைத் தான் சுமந்து வந்தாள்!

சுமந்து வந்தாள்!

பூங்குயில் இசை பொழிய பூமரங்கள் தலை அசைய

பொதிகை வளர் தென்றலுமே வந்தாள்!-நறும்

பூமணத்தைத் தான் சுமந்து வந்தாள்!

சுமந்து வந்தாள்!

மாமழை தான் பொழிய மான்கூட்டம் அதைரசிக்க

மங்கை அவள் தென்றலுமே வந்தாள்!-மந்த

மாருதமாய் மலைவெளியில் நின்றாள்!

வந்து நின்றாள்!

அருவி சலசலக்க ஆற்றுவெள்ளம் கலகலக்க

அமுதமெனத் தென்றலுமே வந்தாள்!-இயற்கை

அன்னையினைக் கண்டு உவகை கொண்டாள்!

உவகை கொண்டாள்!

(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *