பூமியில் வாழும் மானிடர் யாவரும்

பிறப்பால் என்றும் ஓர்நிரைஆம்!

பிரிவினை பேதமை உயர்ந்தவர் தாழ்ந்தவர்

அறிவிலி மாந்தரின் இழிசெயலாம்!

உடம்பால் உயிரால் ஒன்றேயாயினும்

உன்மதம் கொண்ட ஒருசிலரின்

மடமை அதுவால் மனிதம் மறந்து

மதியினை இழந்தோர் வெகுபலரே!

அறியா மாந்தர் செய்திடும் தவறை

அவனியர் நாமே பொறுத்திடலாம்!

அறிவினில் சிறந்து அனைத்தும் உணர்ந்த

கெடுமதியாரை என்ன செய்ய!

பிறப்பது பூமியில் ஒருமுறையாம்!

பிறவியில் மனிதரும் ஒருமுறையாம்!

பிறவியும் நிலையா! யாக்கையும் நிலையா!

பெற்றிமை அதையே அறிந்திலராம்!

நேற்றைய வாழ்வு இன்றில்லை என்னும்

நெறியினை அறிவீர் மானிடரே!

போற்றிட பிறஉயிர் பொறையுடை வாழ்வே

பூமியில் என்றும் நிலையாமாம்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *