ஏருபூட்டி எருதகட்டி இதமாக மண்உழுது

சேறுஓட்ட இல்லையினா பொன்னம்மா!-நாம்

சோறுபொங்க தோதுஇல்லே பொன்னம்மா!

ஆழமாக நெலம்உழுது ஆடியிலே வெதவெதச்சி

ஆத்துநீரப் பாச்சிவந்தா சின்னம்மா!-அது

ஐப்பசில வெளைஞ்சி நிக்கும் சின்னம்மா!

வயலக்கட்டி வரப்பக்கட்டி வரப்பில்நண்டு வலயக்கட்டி

வாய்க்காலில் நீர்பாய்ச்ச பொன்னம்மா!-நெல்லு

வகையாக வெளஞ்சிருக்கும் பொன்னம்மா!

ஆத்தோரம் வளந்து நிக்கும் மரங்களது தழய வெட்டி

சேத்திலதும் சேர்த்திடவே சின்னம்மா!-அங்கே

நேர்த்தியாக நெல் விளையும் சின்னம்மா!

வெளஞ்சநெல்லு கதிரறுத்து களஞ்சியத்தில் சேத்துவைக்க

வெசனமில்லே சோறப்பத்தி பொன்னம்மா!-நம்ப

விவசாயம் சோறு போடும் பொன்னம்மா!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *