மண்மீது மரம் நமக்கு வரமே அன்றோ!-அதை
மனம் மாறி அழித்திடுதல் கொடுமை அன்றோ!
கண் போலக் காப்பதுவே மரம் அல்லவோ!-அதைக்
கணப்பொழுதில் குலைத்திடுதல் சாபமல்லவோ! (மண்மீது)
காடுகளின் சேவையதும் மாறுவதுண்டோ!-அதன்
கனிவான செயல் எதுவும் மீறுவதுண்டோ!
மன்பதைக்கு ஆதாரம் இயற்கை அல்லவோ!-அதை
மதிக்காமல் சிதைப்பதுமே பாவமல்லவோ! (மண்மீது)
உயிர்க்காற்றை வழங்குவதில் பஞ்சமில்லையே!
உயிர் நீரைத் தருவதிலும் வஞ்சமில்லையே!
உவந்தளிக்கும் சேவைகளோ கொஞ்சமில்லையே!
உளம் மாறி உருக்குலைக்க அஞ்சவில்லையே! (மண்மீது)
கண் போல உயிர்களையே காத்திருந்தேன்!-பல
கரம் கொண்டு மண்ணுலகைப் போர்த்திருந்தேன்!
என் குடும்பம் என்றெண்ணி இனிதிருந்தேன்!-அந்த
இதயமில்லா மனிதர் கண்டு அதிர்ந்துவிட்டேன்! (மண்மீது)
(கண்ணும் கண்ணும் பேசியதும்-பாடல் மெட்டு)

Leave a Reply