மண்ணுயிர் மகிழ்ந்தன மழையாலே!

மணமது கமழ்ந்தது மலராலே!

பொன்னுலகலர்ந்தது பொலிவாலே!-அங்கு

பொங்கிடும் கதிரவன் ஒளியாலே!-(மண்ணுயிர்)

காலையில் நான் ஒரு கனவு கண்டேன்!-அதைக்

கண்களில் நிறுத்திடக் கனிவு கொண்டேன்!

வாழையும் தென்னையும் வளர்ந்திருக்கும்!-அங்கே

வயல்வெளியில் நெல் விளைந்திருக்கும்!

சோலையில் மலர்கள் மலர்ந்திருக்க!-அதை

சொர்க்கம் என்றே நான் நினைத்திருந்தேன்!-(மண்ணுயிர்)

மூங்கில் குழலாய் இசைத்திருக்க!-அங்கே

மொய்த்திடும் வண்டுகள் இசை கூட்ட!

வேங்கை மரங்கள் மலர் சொரிய!-அந்த

விந்தையில் எனை நான் மறந்துவிட்டேன்!-(மண்ணுயிர்))

ஏரி குளங்கள் நிறைந்திருக்க!-வயல்

ஏர் உழும் உழவர் உழுதிருக்க!

ஊர்வலம் போகும் பறவைகள் கண்டு

உளம் உவந்தேன் நான் எனை மறந்தேன்!-(மண்ணுயிர்))

(மலர்கள் மலர்ந்தன பனியாலே-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *