வான் மீது வளைய வரும் வான் நிலவே!-உன்

வரவினுக்காய்க் காத்திருந்தேன் வா நிலவே!

தேனமுதைப் பொழிந்திருக்கும் வான் நிலவே!-மென்

தென்றல் உந்தன் தோழியுடன் வா நிலவே!

புவியினுக்குப் பொலிவினையே கூட்டிடுவாய்!-நனி

கவிதை இன்பம் உள்ளத்திலே ஊட்டிடுவாய்!

பொங்கிவரும் அலைகளையே காட்டிடுவாய்!-எங்கும்

மங்காத ஒளி தீபம் ஏற்றிடுவாய்!

தங்கம் நிகர் வண்ணமுடை வெண்ணிலவே!-நின்

தண் எழிலில் மயங்கி நின்றேன் வெண்ணிலவே!

தரணியிலே உயிர்களெல்லாம் வெண்ணிலவே!-நின்

தண்மதியால் தழைக்குதிங்கே வெண்ணிலவே!

பொன் எழிலைப் பூமியிலே பொன் நிலவே!-நீ

பூசிடுவாய் ஆசையுடன் பொன் நிலவே!

புதுமைகளைப் புகுத்திடுவாய் பொன் நிலவே!-பெரும்

புரட்சியையும் செய்திடுவாய் பொன் நிலவே!

வான் மீது வளைய வரும் வான் நிலவே!-உன்

வரவினுக்காய்க் காத்திருந்தேன் வா நிலவே!

தேனமுதைப் பொழிந்திருக்கும் வான் நிலவே!-மென்

தென்றல் உந்தன் தோழியுடன் வா நிலவே!

(காண வந்த காட்சியென்ன-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *