வண்ணத்துப் பூச்சிக்கும் வாலாட்டிக் குருவிக்கும்

சொத்து சுகம் என்பதேது!-அதன்

சுறுசுறுப்பை நீயும் பாரு!

கானப்புறாவுக்கும் காட்டுக்குயிலுக்கும்

கல்விச்சாலை என்பதேது!-அந்த

கானம் சொல்லித் தந்ததாரு!

காக்கைக்குருவியும் காடை கௌதாரியும்

கட்டி வாழுகின்ற கூடு!-அதில்

காணும் திறமையை நாடு!

பூவண்ணச் சிட்டுக்கள் பொன்வண்டு மொட்டுக்கள்

பூமிக்குச் சேர்த்திடும் வண்ணம்!-அதைப்

போற்றிடவே மனம் எண்ணும்!

ஆடும் மயிலுக்கும் அன்றில் பறவைக்கும்

நட்டுவாங்கம் சொன்னதாரு!-அதன்

நாட்டியமோ வெகு ஜோரு!

மின்மினிப் பூச்சியும் மீன்கொத்திப் பறவையும்

மேவிடும் பூமிக்கோர் அழகு!-அதன்

மேன்மையை நீயுமே பழகு!

தச்சன் குருவிக்கும் சாதகப் பட்சிக்கும்

வித்தை கற்றுத் தந்ததாரு!-அதன்

வெற்றியை நீயுமே பாடு!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *