மழைத்துளி மண்ணிலே வீழ்ந்திட-அதன்
மாட்சிமை எங்கும் பசுமையே!
கலை நோக்குட னே அதைப் பார்த்திட-நனி
காவியமே கண்ணில் தோன்றிடும்!
பூத்து சிரிக்கும் மலர்களும்-அடை
காத்திடும் வண்ணப் பறவையும்
சேர்த்திடுமே ஒரு இன்பமே!-அதன்
நேர்த்தியை என்னென்று சொல்லிட!
பூமியெங்கும் பச்சைப் பட்டுடை!-ஒரு
புத்தொளி வீசிப் புலர்ந்திடும்!
ஆறு குளங்கள் நிறைந்திட -அது
ஆர்த்திடும் எங்கும் வளமையே!
கோலமிகு வண்ணப் பூச்சிகள்!-எக்
காளமிட்டே கலி கூறிடும்!
காலமது துணை வந்திட-இந்த
ஞாலமெங்கும் என்றும் நன்மையே!
நீண்டு உயர்ந்த மரங்களும்-அவை
நிறைந்திருக்கும் நல் வனங்களும்
பூண்டிடும் பூமிக்கு ஓர் அணி-அதைப்
போற்றி வளர்த்திடுவோம் இனி!

Leave a Reply