புன்னை மரங்களுண்டு!

பூம்பொழிலின் சாரலுண்டு!

பொன்னெழில் பூத்ததுவே ஓவியமாய்!-அது

பொழிந்திடுமே அழகினையே காவியமாய்!

கருங்குயில் இசைத்திருக்கும்

காவிரித்த காவிரியின்

கரைகளில் தவழ்ந்திடுமே இசையமுதே!-அது

காதினிலே சேர்த்திடுமே தேன் அமுதே!

மாங்குயில் குடியிருக்கும்

மாமரம் நிறை சோலை

மஞ்சள் வான் அழகில் மயங்கியே

மனமே இன்பமதால் மாறிடுமே!

பொன் வண்டு இசை பாடி

பூக்களில் தேன் குடிக்க

பூமரம் நிறை பொன்னிக் கரையிலே

பொங்கிடுமே உயிர்நீரே நுரையிலே!

புன்னை மரங்களுண்டு!

பூம்பொழிலின் சாரலுண்டு!

பொன்னெழில் பூத்ததுவே ஓவியமாய்!-அது

பொழிந்திடுமே அழகினையே காவியமாய்!

(பூ மரத்து நிழலுமுண்டு-பாடல் மெட்டு)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *