பொங்கிவரும் கடல் அலையாய்
பங்கயத்தின் இதழ் அழகாய்
தெங்கதனின் இனிமையதாய்
தென்றலதன் குளிர்மையதாய்
எங்கும் நிறை இயற்கை உனைக் கண்டேன்! -என்
இதயமதில் உனை நினைந்து நின்றேன்!
நினைந்து நின்றேன்!
வானுயர்ந்த வரைகளதாய்
வண்டுலவும் சோலையதாய்
வண்டமிழின் செழுமையதாய்
வண்ணமலர் நறுமணமாய்
வையமெங்கும் இயற்கை உனைக் கண்டேன்! -உன்
வளமையதில் எனைமறந்து நின்றேன்!
மறந்து நின்றேன்!
மாங்குயிலின் தேனிசையாய்
மங்கையவர் தளிர்நடையாய்
மேகமதன் மழையதுவாய்
மென்காற்று தரும்சுகமாய்
மேதினியில் இயற்கை உனைக் கண்டேன்! -உன்
மேன்மையதில் உளம் கனிந்து நின்றேன்!
கனிந்து நின்றேன்!
ஓங்கிநிற்கும் மரநிழலாய்
ஓடிவரும் நதிஅழகாய்
ஓங்கார இசைஅமுதாய்
ஓலமிடும் பெருங்காற்றாய்
உலகமெங்கும் உன் எழிலைக் கண்டேன்-அந்த
உணர்வினிலே ஊன்கலந்து நின்றேன்!
கலந்து நின்றேன்!
(தண்ணிலவு தேனிறைக்க-பாடல் மெட்டு)

Leave a Reply