மேகம் பொழியும் மழைத்துளி போலெங்கள்
மேனி வியர்வை பொழிந்திந்த மண்ணில்-முப்
போகம் விளைந்திட அல்லும் பகலுமே
கால் கைகள் தேய உழைத்திடுவோம்!
வயல் சேற்றினிலே உளைந்தாற்றியதால்
உள்ளங்காலெங்கும் சேற்றுப்புண் ஆகிடுமே!
ஓடி உழைத்திட நாள் முழுதும்
வீடு வந்ததுமே கண்கள் சொக்கிடுமே!
மண்ணிலே நீர் பாய்ச்சி உழுதபின்னே-அதை
மட்டம் செய்யப் பரம்படித்திடுவோம்!
மண்ணை வெட்டி வரப்பெடுத்த பின்னே-அதன்
மடையைத் திறக்க நீர்ப்பாய்ந்திடுமே!
நெற்பயிரை மண்ணில் நட்டு நீர் பாய்ச்சிட
நெஞ்சில் நிறைந்திடும் நிம்மதியே!
நட்டபயிரை நாம் கண்ணெனக் காத்திட
நாளும் வளர்ந்தது தந்திடும் நெல்மணி!
நெல்லை அறுவடை செய்து குவித்திட
நேர்ந்திடுமே ஒரு இன்ப சுகம்!
தொல்லைகள் போயின; போயின துன்பங்கள்!
தொழுதிடுவோம் இந்த மண்மகளை!

Leave a Reply