எல்லையில்லா துயரம் புவியில் வந்தது ஏன்!
எண்ணிடுவாய் மனிதா இயல்பாய் இதயமதில்!
எல்லா வளங்களையும் இயற்கைப் படைத்ததுவே!
எல்லா உயிர்களுமே இனிதே மகிழ்ந்திடவே!-(எல்லை)
வல்லார் ஒரு சிலரே வளங்களை மடைமாற்ற
இல்லார் அழுகுரலே எங்கும் ஒலிக்கிறதே!
அழுகுரல் தனைக்கேட்டு அதிர்ச்சியில் இயற்கையுமே
அதிர்வலையால் உலகை ஆட்டிப் படைக்கிறதே!-(எல்லை)
வாழ்வில் மகிழ்வதையே வழங்கிடும் வளங்களையே
வகைதொகை இல்லாமல் அழித்திடவே மனிதர்!
வஞ்சினம் தான் கொண்டு எழும்பிய இயற்கையதே
வையத்து உயிர்களையே வதையதும் புரிகிறதே!-(எல்லை)
இயற்கையின் கொடையதையே எண்ணிடும் மாமனிதர்!
இன்பமதே ஓங்கி இயைந்திட நல் வழியே!
தழைத்திடுமே நலமே! தாரணி எங்கணுமே!
தயை புரிவாள் அன்னை இயற்கையும் புவிமீதே!-(எல்லை)

Leave a Reply