கண்கோடி வேண்டுமடி கானமயிலே! -அழகு
கானகத்தை ரசித்திடவே கானமயிலே!
கனிகள் நிறைமரங்கள்!
களித்திடும் உயிரினங்கள்!
கண்டவர் கண்மயங்கும் கானமயிலே!
தென்றல் தவழ்ந்திருக்கும்
தேனாறு பாய்ந்திருக்கும்
தென்பொதிகை சந்தனமே கானமயிலே! -அரிய
திரவியமே தந்திடுமே கானமயிலே!
அருவி சலசலக்கும்
ஆற்றோரம் செழித்திருக்கும்
ஆனந்தத் தாண்டவமே கானமயிலே! -அங்கே
அமுதே பொழிந்திருக்கும் கானமயிலே!
பசுந்தளிர் செடி கொடிகள்
பாடிடும் புள்ளினங்கள்
பார்வையில் ஈர்த்திடுமே கானமயிலே! -எங்கும்
பசுமையதே பாய்விரிக்கும் கானமயிலே!
உலகினர் உய்த்திடவே
உயிர்நீர் உவந்திடுமே!
உணவும் உடைவழங்கும் கானமயிலே! -மனிதர்க்கு
உறையுளும் மருந்தாகும் கானமயிலே!
(ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே! -பாடல் மெட்டு)

Leave a Reply