மண்:
மண்ணில் தோன்றிடும் யாதொரு உயிரும்
மற்றொரு நாளில் மறைந்திடுமேயாம்!
விண்ணில் வலம் வரும் ஞாயிறும் திங்களும்
விதியதன் வழியே உலவிடுமேயாம்!
நீர்:
விசும்பின் மழைத்துளி வீழ்ந்திட மண்ணில்
வியத்தகு விந்தை நிகழ்ந்திடும் ஆங்கே!
பசும்புல் முதலாய்த் தாவரம் யாவும்
பயத்திடும் நன்மை மண்ணுயிர்க்கெல்லாம்!
காற்று:
பூமியின் மேலே விரவிடும் காற்றே!
புவி உயிர்க்கெல்லாம் உயிர்நாடி!
போதரவாக நாம் அதைப் பேண
புரிந்திடும் நன்மை பலகோடி!
தீ:
உயிர்களில் நிறைந்தே விளங்கிடும் தீயே!
உயிர்களுக்கெல்லலாம் ஆதாரம்!
உலகினில் முறையாய்ப் பேணிடத்தவறின்
உயிர்களுக்கே அது சேதாரம்!
வெளி:
வெளியது பரந்தே விரிந்தே திகழ!
வினைகள் பலவும் நிகழ்ந்திடுதே!
வியனுலகெங்கும் நலமே நிறைய
நயனுடன் உயிர்கள் மகிழ்ந்திடுதே!
ஐம்பெரும் சக்தி அளவோடிருக்க
அகிலம் எங்கும் இன்பமயம்!
அளவது மீறி நிலையது பிறழ
ஆங்கே தோன்றும் துன்பமதே!

Leave a Reply