உழவதுவே உலகமிதில் உயர் தொழிலாகும்!-இந்த
உண்மையினை உணர்ந்திடவே வளம் நமதாகும்!
விளைந்திடவே நெல்மணியும் வயலதன் மேலே!-எங்கும்
விளங்கிடுமே இன்பமதே புவியில் எந்நாளும்! (உழவதுவே)
மாரியதன் கொடையதுவால் மண் வளமாகும்!-உழும்
ஏரதனின் வளமையதால் பயிர் உருவாகும்!
மழை வெயிலில் உழைப்பதனால் மணியதுவாகும்!-தன்
மானமிகு உழவரதால் நலமது மேவும்! (உழவதுவே)
மண் அதிலே வியர்வை விழ பொன் அதுவாகும்!-இந்த
மாநிலமே உயிர்த்திடவே உணவது ஈனும்!
கண் எனவே உழுதுநிலத்தைக் காத்திட நாளும்-நல்
கதி அருளும் மண் மாதா பூமியின் மேலே! (உழவதுவே)
(ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை-பாடல் மெட்டு)

Leave a Reply